#F66708

நமது உறவுகள் உறுப்பினர்களாக இணைய முக்குலத்தோர் எழுச்சி கழகம் அன்போடு வரவேற்கிறது. இவன் கழக பணி குழு 9842177066, 9751150009
தெய்வீக திருமகனாரின் சிந்தனையிலிருந்து
"அரசியல் என்பது மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. " - பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர்

வரலாறு

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 


மருதிருவர் ஆவணப்படம் (தினகரன் ஜெய் - குறும்பட இயக்குநர்):

                                 விடுதலைப் போராட்டக்களத்தில் வெள்ளையனை எதிர்த்து தூக்குமேடை கண்ட வீரத்தமிழர்களான சின்னமருது, பெரியமருது சகோதரர்களைப் பற்றி "மருதிருவர்" எனும் விவரணப்படத்தையும், குற்றப் பழங்குடிகள் சட்டம் பற்றி "ரேகை" எனும் விவரணப்படத்தையும் எடுத்து சமூகச் சிந்தனையாளர்களையும் குறும்பட ஆர்வலர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறார் தினகரன் ஜெய்."மருதிருவர்" மருது சகோதர்களான சின்னமருது, பெரியமருது ஆகியோரின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றையும் அவர்கள் கோயில்களுக்கு ஆற்றிய திருப்பணியையும் ஓவியங்களின் மூலமாகவும் ஆவணங்களின் ஊடாகவும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.மருதிருவரின் வீரத்தையும் திருப்பணிகளையும் நினைவுகூறவும் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் இப்படம் பயன்படக்கூடும்.





.வீரம் விளைந்த தமிழ்பூமி

மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர்

இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன்

                                                       சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.
                                        முதலில் அஞ்சாநெஞ்சன் சின்னமருது மக்கள் இதயம்துடிதுடித்தது.அடுத்தது சின்னமருதுவின் மூத்தமகன், உற்றார், உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது இப்படி மருது பாண்டியர் வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர். அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத நிலை. கடைசியாக சின்ன மருதுவின் மகன் பதினைந்து வயது பாலகன். வயதை காரணம் காட்டி அவனை தூக்கிலிடவில்லை.ஆனால் அவன் உடல் முழுவதும் சங்கிலியால் பிணைத்திருந்தனர்.கால்களில் இரும்பு குண்டை கட்டிவிட்டிருந்தனர். தந்தை,பெரியப்பா,சகோதரன்,பங்காளிகள் தூக்கில் தொங்கும் காட்சியை காண வைத்தது கொடுமை.அவனோடு சேர்த்து ஒரு மாவீர்னையும் உடல் முழுவதும் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்தார்கள். நடக்க முடியாத அளவிற்கு இருப்பு குண்டுகளை அந்த வீரனின் கால்களிலும் கட்டிவிட்டிருந்தார்கள்.
                                                       இந்த வீரனை விட்டு வைத்தால், துரைச்சாமியை வெள்ளையருக்கு எதிராக உருவாக்கி விடுவான் என்ற பயம் வெள்ளையருக்கு அதனால் அவனையும் சங்கிலியால் கட்டி நாடு கடத்த உத்தரவிட்டான் கர்னல் வெல்ஷ் என்ற வெள்ளை அதிகாரி.72 பேரில் இவர்கள் இருவருக்கு மட்டும் இரும்பு குண்டுகளைப் பிணைத்திருந்தார்கள்.
                                                      அந்த வீரன் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன். மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் ஒருவர். முதன்மையானவர்.மாவீரன்புலித்தேவன், கட்டபொம்மன், மருதுபாண்டியர் காலங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் படைத் தளபதிகளாகவும் முக்கிய பொறுப்புக்களை வகித்ததாகவும் நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் கூறுகின்றன. ராமநாதபுரத்திற்கு ஜாக்சன் துரையைச் சந்திக்க கட்டபொம்மன் சென்ற போது, அவனோடு சென்றவர்கள் என்று,
                                                      "மம்மது தம்பியும் முகம்மது தம்பியும் மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான் தர்மகுணவான் இபுராமு சாகிபும் தம்பி இசுமாலு ராவுத்தனும்..." என்று வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் (பேரா.வானமாமலை பதிப்பு - 1971) கூறுகிறது. அவர்களில் முக்கியமானவராக, நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமிய வீரராக சின்னமருதுவின் படைத்தளபதி சேக் உசேன் குறிபிடப்படுகிறார்.
                                                     தெற்கே சின்ன மருதும், ஊமைத்துரையும், விருப்பாச்சி கோபால் நாயக்கரும், தீரன் சின்னமலையும் சேர்ந்து உருவாக்கிய திண்டுக்கல் புரட்சிப்படைக்கு யாரைத் தளபதியாக அறிவிப்பது என்று யோசித்து கொண்டிருந்தனர்.
                                                    ‘நானே அதற்கு தலைமை ஏற்பேன்’ என்று திண்டுக்கல் புரட்சிப்படைப் படையின் எழுச்சி மிக்க வீரராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் இந்த சேக் உசேன் தான். வெள்ளையரை இந்த நாட்டை விட்டே விரட்ட, உருவான கூட்டுப்படையின் முதல் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு வீரம் மட்டுமல்ல விவேகமும், நாட்டுபற்று, நிர்வாகத்திறன் என்று சகல திறமையும் வேண்டும். அந்த செயலை செய்து தன்னை போராளியாக பிற்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் புகழும் அளவிற்கு உயர்ந்து நின்ற வீரர் சேக் உசேன்.
                                                   சின்னமருது பல வெற்றிகளைக் குவிக்க பக்கபலமாக இருந்ததால் இவர் மேல் வெள்ளையருக்குக் கோபம். கடைசியாக நடந்த காளையர்கோயில் போர் பல மாதங்களாக முடிவுக்கு வராமல் இருந்ததற்கு சேக் உசேன் போன்ற சின்னமருதுவின் படைத்தளபதிகளின் வீரமிக்க போராட்டமே என்று கருதினர். அதனால் போர் முடிந்ததும் சேக் உசேனை பொறி வைத்துப் பிடித்து வந்தனர். மலேசியாவிற்கு சொந்தமான பினாங்கு தீவுக்கு உடனே இவரை நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.
                                                       இரும்பு குண்டுகள் பிண்ணைக்கப்பட்ட நிலையில் சேக் உசேனும் துரைச்சாமியும் கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் நகர்ந்தது. அது எங்கே போகிறது? என்றே அவர்களுக்கு தெரியாது. கப்பலில் இருந்தபடி தன் தாய்நாட்டையும் 15 வயது துரைச்சாமியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் சேக் உசேன். துரைச்சாமிக்கு முடிந்த அளவு உதவ வேண்டும் என்று உறுதிபுண்டார். கடலிலே நாட்டுகள் பல கடந்தன.
                                                      சேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேரும் இந்த தீவில் கொண்டு வந்து விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இது எந்த இடம் , இங்குள்ளவர்கள் என்ன மொழி பேசுபவர்கள் என்றே தெரியாது.
                                                      உடல் முழுதும் இரும்பு சங்கில்களால் பிண்ணைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் நடக்கும் போது ‘கிளிங்!’ ‘கிளிங்!’ என்று சத்தம் எழுந்தது.இவர்கள் தப்பிப் போகாமல் இருக்கவே இப்படியோரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ளவர்கள், ‘கிளிங் கிளிங்” என்ற சத்தம் வந்ததால் இவர்களை ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்தனர். இதுவே நாளடைவில் பிறமொழியைச் சேர்ந்தவர்கள் பினாங்கு சென்ற தமிழர்கள் அனைவரையும் ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
                                                      சேக் உசேனுக்கு இரு கால்களிலும் இரும்பு குண்டுகள் இணைக்கப்பட்டிருந்தால், அவரால் சிறிது நேரம் கூட நடக்க முடியாது. என்றாலும் கடுமையான வேலைகளைக் கொடுத்து வாட்டினார்கள்.சரியாக உணவு தராமல் வாட்டி வதைத்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் உணவே தராமல் சித்திரவதை செய்யத் தொடங்கிவிட்டனர்.எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் உணவு கூட தராமல் காலம் தள்ளியது கொடுமை. ஒரு நாள், தங்களை எந்த வெள்ளைக்கார அதிகாரி இந்தத் தீவிற்கு நாடு கடத்தச் சொல்லி உத்தரவிட்டானோ, அதே கர்னல் வெல்ஷ் துரை தன் மனைவி மக்களோடு விடுமுறையைக் கழிக்க இந்தத் தீவிற்கு வந்திருந்தான்.உடன் இருந்தவர்கள் எல்லாம் வெல்ஷை பார்த்து கருணை மனு கொடுக்க சொன்னார்கள்.காலில்உள்ள இரும்பு குண்டுகளை மட்டுமாவது அகற்றச் சொல்லச் சொல்லி மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
                                                          நீண்ட மௌனத்திற்குப் பிறகு சேக் உசேன்,"என் தாய் மண்ணிற்காகப் போராடியவன் நான். என்னை விடுவிக்க இந்த இழிநிலை வெள்ளையர்களிடம் போய் கெஞ்சமாட்டேன்.செத்தாலும் சாவேனே தவிர அந்தச் செயலை மட்டும் செய்யமாட்டேன்" என்று வீராவேசமாகப் பேசியிருக்கிறார்.
                                                         ஒரு கட்டத்தில் உணவு இன்றி, இரும்பு குண்டுகளால் நகரக்கூட முடியாமல் யாரிடமும் எதையும் யாசகமாகக் கேட்காமல் சேக் உசேனின் உயிர் அந்த பினாங்கு மண்ணில் அடங்கியது.இவர்கள் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட விஷயமே, கர்னல் வெல்ஷ் துரை,"எனது இராணுவ நினைவுகள்" என்ற நூலில் குறிப்பிட்ட பின்னர்தான் உலகிற்கே தெரியும்.
                                                        இனமொழி வேறுபாடின்றி தமிழ் மண்ணுக்காகப் போராடிய சேக் உசேன் போன்ற தன்மானம்மிக்க வீரர்களின் வரலாறுகள் இன்னும் அதிகளவில் வரவேண்டும். அதுவே நம் வீரமண்ணிற்கு நாம் செய்யும் வணக்கமாகும்.
                                                                                                        
                                                      நன்றி : குமுதம் வார இதழில் இரா.மணிகண்டன்

.



குற்றப் பழங்குடிகள் சட்டம் 1911
                   
                    கைரேகைச் சட்டம், குற்றப்பரம்பரைச் சட்டம், நெருக்கடிச் சட்டம், என பல பெயர்களால் அழைக்கப்பட்ட குற்றப் பழங்குடிகள் சட்டம் 1911”.எல்லோரையும் அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ்காரன், குறிப்பிட்ட சில இனங்களை பங்கப்படுத்தி அழிக்க நினைத்தான். அந்த பிரிவினரால் மட்டுமே வெள்ளையன் மீதான கோபத்தை இன்றும் விட்டொழிக்க இயலவில்லை.
                                       
                    களவைத் தடுக்க வந்ததே குற்றப்பரம்பரைச் சட்டம்என மேலோட்டமாகச் சொல்லப்படுவதுண்டு. அது பொய். பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்தவர்களில் அடக்க முடியாத, நெஞ்சுரமிக்க இனக்குழுக்களை இழிவு படுத்த ஒழிக்க வந்த கொடுஞ்ச்சட்டம் இது.              

                                     இந்தியா முழுக்க 200 சாதியினர் பட்டியலிடப்பட்டு பிறவிக் குற்றவாளிகள்என அந்நியனால் அடையாளப்படுத்தப்பட்டனர். தமிழ்நாட்டில் மட்டும் 90 சாதியினர் மீது சட்டம் பாய்ந்தது.1911இல் பல திருத்தங்களோடு புதிய வடிவம் கண்ட சட்டம், கள்ளர், மறவர், அகமுடையார், படையாச்சி, குறவர், தெம்பார், என எண்ணிக்கையைச் சுருக்கி இறுக்கியது. இந்த இனக் குழுவினரே அந்நிய ஆட்சிக்கு முந்தைய போர்ப்படைகளில் பெரும் பங்காற்றியவர்கள்.


                                     இந்தச் சட்டத்தை எதிர்த்து தேசியவாதியும் வாய் திறந்தாகப் பதிவுகளே இல்லை. கைரேகை வைக்காதே.கட்டை விரலை வெட்டி எறிஎன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மட்டும் முழுக்கமிட்டார். தோழர்கள் ப..ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, கே.டி.கே தங்கமணி போன்ற பொதுவுடைமைவாதிகள் ஆதரவு குரல் கொடுத்தனர்.
    
                   தேச விடுதலைப் போர் உச்சத்தில் இருந்த நேரம். ரௌலட் சட்டத்தை எதிர்த்துத் திரண்டதால் 1919இல் நடந்த ஜாலியன் வாலாபாக் கொடூரம் அரசியல் படுகொலையாய் வரலாற்றில் பதிவானது. அதற்கு அடுத்த ஆண்டு 1920இல் தம் பிறப்பையே இழிவுப்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து உசிலம்பட்டி – பெருங்காமநல்லூர் பிறமலைக் கள்ளர் இன மக்கள் 16 பேர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையான கொடூரம் போலீஸ் குறிப்புகளில் மட்டுமே பதிவானது. செத்து விழுந்தவர்களில் மாயக்காள் என்கின்ற பொண்ணும் ஒருவர். சுட்ட போலீஸ்களில் எவரும் வெள்ளையர் இல்லை. எல்லாம் பிற சாதித் தமிழர்களே. பெருங்காமநல்லூரில் செத்து விழுந்தவர்களின் மார்பிலும், மாயக்காளின் பிறப்பு உறுப்பிலும் துப்பாக்கி முனை பைனட் கத்தியைச் சொருகி, பூட்ஸ் காலால் நெஞ்சில் மிதித்தேறி நின்று கொக்கரித்தவர்கள் பிற சாதித் தமிழர்கள். இந்த தமிழன் மீது அந்தத்   தமிழனுக்கு அத்தனை கோபம்.

பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத்தேவர்
"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர்.
"சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன். நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர். பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார்.அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார்.1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.
தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர்.பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.

நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-

தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.
அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.
அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம்

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.
சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், இரா.இராகவையங்கார், மு.இராகவையங்கார், அரசன் சண்முகனார், இராமசாமிப்புலவர், சபாபதி நாவலர், சிங்காரவேலு முதலியார், நாராயண அய்யங்கார், சுப்பிரமணியக் கவிராயர், சிவஞானம் பிள்ளை, சிவகாமி ஆண்டார், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், புலவர் அப்துல்காதிர் இராவுத்தர், எட்டயபுரம் சாமி அய்யங்கார், பரிதிமாற்கலைஞர், அரங்கசாமி அய்யங்கார், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.

உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.
அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.
மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர். தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.



நன்றி: தமிழ்மணி (தினமணி)

வீரமங்கை வேலுநாச்சியார்
பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
1730லஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.
1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை தோற்றுவிக்கப் பட்டது.அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர்.மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சியரபான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.
1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார்.சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்
1. 1728 – 1749 – முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 – 1772 – சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 – 1783 – வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1783 – 1801 – மருது பாண்டியர்கள் – பெரிய மருது (எ) வெள்ளை மருது மற்றும் சின்ன மருது
5. 1801 – 1829 – கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்

வெள்ளையத்தேவன்
                                     சேதுபதி சமஸ்தானத்திற்கு உட்பட்டது சாயல்குடி என்ற கிராமம். இதன் தலைவர் மங்களத்தேவர். சிற்றரசர்களுக்குரிய அத்தனை சிறப்பகளையும் வீரத்தையும் கொண்டவர். இவருடைய மகன் தான் வெள்ளையத்தேவன் என்கிறார்கள்.

எட்டயபுரம் மன்னர் தனக்கு அளித்து வந்த இன்னல்களைக் எடுத்துக் கூறி, கட்டபொம்மன் மங்களத்தேவரிடம் உதவி கேட்டு வந்தான். “உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்னாமல் உதவுவது நம் பண்பாடு’ என்ற நெறியில், அவருக்கு உதவ தன் மகன் வெள்ளையத்தேவனை அனுப்பியதாக ஒரு செய்தி கூறுகிறது. தந்தையின் ஆணைப்படி தனயன் வெள்ளையத் தேவன் கட்டபொம்மனுக்கு உதவ வந்ததாகவும், வந்த இடத்தில் வெள்ளையத்தேவனின் வீரம் கண்டு, அவனையே தன் படையில் தலைமைத் தளபதியாக நியமித்துக்கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இன்னொரு கட்டுக் கதையும் உண்டு. சிறுவயதில் கட்டபொம்மன் தன் தந்தையுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனதாகவும் அங்கு கண்டெடுக்கப்பட்ட குழந்தையை அரண்மனையில் வைத்து வளர்த்ததாகவும், அக்குழந்தைதான் பிற்காலத்தில் வெள்ளையத்தேவனாக வளர்ந்து, படைத் தளபதி அளவிற்கு உயர்ந்ததாகவும் ஒரு கதை வழக்கில் உண்டு. அந்த செஞ்சோற்றுக் கடனுக்காகத்தான் இறுதிவரை கட்டபொம்மனோடு இருந்து வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்ததாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.
வெள்ளையத்தேவன் பிறப்பிலேயே வீரம் கொண்டவன். இளம் வயது முதல் வேல் சண்டையில் அதிக ஈடுபாடு கொண்டவன். அவன் போருக்குப் போகும் முன்சேவல்போர் நடத்துவானாம். அதில் அவன் சேவல் வெற்றி பெற்றால் போரில் வெள்ளையத்தேவனை யாராலும் வெல்ல முடியாது. எந்த போரிலும் தோற்காத அவனது சேவல் அன்று நடந்த சண்டையில் தோற்றதால்தான் வெள்ளையருக்கு எதிராக நடந்த போருக்குப் போகாவிடாமல் அவன் மனைவி வெள்ளையம்மாள் தடுத்திருக்கிறாள். “”போகாதே போகாதே என் கணவா…. பொல்லாத சொப்பனம் தானும் கண்டேன்” என்ற ஒப்பாரிப்பாடல் இடம் பெற்றுள்ள நாட்டார் பாடலில் இச்செய்தியுள்ளது. “பகதூர் வெள்ளை’ என்ற பெயரில் உள்ள நாட்டுப்பாடலிலும் இந்த ஒப்பாரிப்பாடல் உள்ளது.
தேசிங்கு ராஜனின் பஞ்சக் கல்யாணி குதிரை போன்றதுதான் வெள்ளையத்தேவனின் குதிரையும்.“ஒட்டப்பிடாரம் வழிதனிலே, ஓடி வருதாம் பேயக்குதிரை…” என்று அந்தக் குதிரையின் வீரத்தைப் பேசாதவர்களே இல்லையாம்.
1799செப்டம்பர் 1-ஆம் தேதி. திருச்செந்தூரில் நடந்த ஆவணி மாதத் திருவிழாவிற்கு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் சென்ற சமயம். ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த கர்னல் பானர்மேன், பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டனர்.
பரங்கியர் படையோ பெரும்படை பீரங்கிகள், துப்பாக்கிப் படைகள், குதிரைப் படைகள் என்று ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து குவித்திருந்தான் ஆங்கிலேயன். பாஞ்சாலங்குறிச்சியில் இருந்ததோ மரபு ரீதியான ஆயுதம் தாங்கிய ஆயிரம் வீரர்கள்.என்றாலும் அஞ்சவில்லை தமிழ்ச்சிங்கங்கள். காரணம் அதற்குத் தலைமை தாங்கியது தலைமைத் தளபதி வெள்ளையத் தேவன். எதிரிகள் படையை அவன் தாக்கியதைக் கண்டு பரங்கியர் பயந்துபின்வாங்கினார்கள். பீரங்கிக்குண்டுகளிடமிருந்து கோட்டையைக் காக்க வெள்ளையத்தேவன் பட்ட பாட்டை எழுத்தில் எழுதமுடியாதாம். நூற்றுக்கணக்கான துப்பாக்கி வீரர்கள் அவன் மார்பை குறிவைத்தார்கள்.
ஆனால், எதிரிகளின் குண்டுகள் அவன் மார்பில் பாய்ந்தபோதும் விடாமல் தொடர்ந்து எதிரிகளை அவன் வாளுக்கு இரையாக்கிக்கொண்டே வந்தான்.செய்தி கேள்விப்பட்டு கட்டபொம்மனும் ஊமைத்துரையும் திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி வந்ததை அறிந்தான். அதுவரை மார்பிலே குண்டுகளைத் தாங்கி, குத்தப்பட்ட வேலையும் பொருட்படுத்தாது பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் பத்திரமாக ஒப்படைத்தான். அடுத்தநொடி அந்தப் போர்க்களத்திலேயே வீரமரணம் எய்தினான் வெள்ளையத்தேவன்.

துப்பாக்கிக் குண்டுகளை முத்தமிட்டபோதும் இறுதிவரை மானத்தை இழக்காமல் மரணம் தொட்ட மாவீரன் வெள்ளையத்தேவன் பற்றிய வரலாறு அதிகம் எழுதாமல் போனது ஏனோ?